அளவற்அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.


Tuesday 30 September 2014

பெண்கள் முகத்தை மறைப்பது நபிவழி அல்ல

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டு அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.

ஆனால் நபிமொழிகளையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து நடைமுறைகளையும் ஆய்வு செய்யும் போது பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்கத்தில் உள்ளதல்ல என்பது தெரிய வரும்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் பாங்கும், இகாமத்தும் இல்லாமல் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும், இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும், நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் ”தர்மம் செய்யுங்கள்! நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகுகள் ஆவீர்கள்’’ என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து, ஏன் (இந்த நிலை) அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள். (நூல்: முஸ்லிம் 1612)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட பெண்மணி பற்றி அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) குறிப்பிடும் போது கண்ணங்கள் கருத்த பெண்மனி என்று கூறுகிறார். இதில் இருந்து அந்தப் பெண்மணி முகத்தை மறைக்கவில்லை என்பது தெரிகிறது. பெண்கள் முகம் மறைப்பது அவசியம் என்றால் தன்னை நோக்கி கேள்வி கேட்ட பெண்ணின் முகம் வெளியே தெரிந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். அவர்கள் கண்டிக்காமல் விட்டதில் இருந்து பெண்கள் அந்நிய ஆண்கள் முன்னிலையில் முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

(விடைபெறும் ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். அப்போது) 'கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவரைக் கவர்ந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 6228

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்த பெண்ணைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) கூறும் போது அழகான பெண் என்று குறிப்பிடுகிறார்கள். அழகான பெண் என்று குறிப்பிடுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தால் மட்டும் தான் சாத்தியமாகும்.

மேலும் ஃப்ழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணைக் கூர்ந்து பார்க்கலானார் என்றும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் முகம் திறந்திருந்தது என்ற கருத்தை இது உள்ளடக்கி இருக்கிறது.

இந்நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தைத் திருப்பி விடுகிறார்களே தவிர முகத்தை மூடிக்கொள்ளுமாறு அப்பெண்ணுக்கு உத்தரவு போடவில்லை. எனவே பெண்கள் முகத்தை மூட வேண்டியதில்லை என்பதை இந்தச் செய்தி தெள்ளத்தெளிவாகக் கூறுகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்து கொள்ள முடியாது. நூல் : புகாரி 578

பெண்கள் முகத்திரை அணிந்திருந்தால் அந்த முகத்திரையே அவர்கள் யார் என்று அறிவதற்குத் தடையாக இருந்திருக்கும். ஆனால் இருளின் காரணமாக அப்பெண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதிலிருந்தே தொழுகைக்கு வந்த பெண்கள் முகத்திரை அணிந்திருக்கவில்லை என்பதை விளங்கலாம்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவாகள், பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள் எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது தர்மமாகக் கருதப்படுமா என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக் கூறிவிட்டார். எனவே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு, ஸைனப்' என பிலால் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஸைனப்? எனக் கேட்டதும் பிலால் (ரலி), அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது எனக் கூறினார்கள். நூல் : புகாரி 1466

நபி (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டு வந்த இரண்டு பெண்களும் “ நபியவர்களிடம் நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்” என பிலால் (ரலி) அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். அந்த இரு பெண்களும் முகத்திரை அணிந்திருந்தால் தாங்கள் யார் என்பதை பிலால் அவர்களிடமே தெரிவிக்காமல் மறைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் முகத்தை வெளிப்படுத்தியவர்களாக வந்திருந்த காரணத்தினால் தான் அவர்கள் யார் என்பதை பிலால் தெரிந்து கொள்கிறார்கள். அவர்களை பிலால் அறிந்து கொண்ட காரணத்தினால்தான் அவ்விரு பெண்களும் வீட்டிற்குள் இருந்த நபியவர்களிடம் தங்களைப் பற்றி சொல்ல வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்தச் சம்பவமும் நபியவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் தான் இருந்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதேச்சையாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். நூல் : முஸ்லிம் 4363

பெண்கள் முகத்தை மறைப்பவர்களாக இருந்தால் அந்நியப் பெண்ணைப் பார்க்கும் பிரச்சணையே எழாது.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள் என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். பாதையின் உரிமை என்ன? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மையை எடுத்துச் சொல்வதும், தீமையைத் தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும் என்று பதிலளித்தார்கள். நூல் : புகாரி 2465

இந்தச் சான்றுகளில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முகத்தை மறைக்க வேண்டும் என்போரின் சான்றுகள்:

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 1838

பெண்கள் அந்நிய ஆண்கள் முன்னால் முகத்தை மறைக்க வேண்டும் என்ற கருத்துடையோர் இந்த ஹதீஸைச் சான்றாகக் காட்டுகின்றனர். அதாவது முகத்திரை அணியும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் தான் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மற்ற நேரங்களில் முகத்தை மறைக்க வேண்டும் என்பது இந்த ஹதீஸில் இருந்து விளங்குகிறது என்பது இவர்களின் வாதம்

இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல. இஹ்ராம் அல்லாத காலங்களில் முகத்தை மறைக்க விரும்பினால் மறைத்துக் கொள்ளலாம் என்ற கருத்து தான் இதில் உள்ளதே தவிர மறைக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து இதில் இருந்து கிடைக்காது.

இஹ்ராமின் போது கால்சட்டை அணியக் கூடாது என்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இஹ்ராம் அல்லாத நேரங்களில் கால்சட்டை அணியலாம் என்ற கருத்து தான் இதில் கிடைக்கும். கால்சட்டை அணிவது அவசியம் என்ற கருத்து இதில் கிடைக்காது.

மேலும் பெண்கள் அன்னிய ஆண்களிடம் இருந்து முகத்தை மறைப்பது அவசியம் என்று இருந்தால் இஹ்ராமின் போது அதை மறைக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். எனவே முகத்தை மறைப்பது அவசியம் இல்லை என்ற கருத்தைத் தான் இது வலுப்படுத்துகிறது.

முகத்தை மறைக்க வேண்டும் என்போர் பின்வரும் வசனத்தையும் சான்றாகக் காட்டுகின்றனர்.

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 33 : 59

இவ்வசனத்தில் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறப்பட்டுள்ளது. முக்காடு என்று தமிழாக்கம் செய்யப்படும் இடத்தில் ஜில்பாப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜில்பாப் என்பது தலையில் இருந்து மார்பில் தொங்கவிடப்படும் துணியாகும் என்பதை ஹதீஸின் துணையுடன் நாம் அறிந்து கொள்ள முடியும். பெண்களின் மார்பகம் எடுப்பாகத் தெரிவதைத் தடுப்பதற்காக தலையில் போடும் துணியை மார்பு வரை தொங்குமாறு அணிய வேண்டும் என்பதுதான் இதன் கருத்தாகும்.

ஜில்பாப் என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை அறிந்து கொள்ள இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள சில ஹதீஸ்களை நாம் துணையாகக் கொள்ளலாம்.

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பி வைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து மாதவிடாயுள்ள பெண்கள் விலகியிருக்க வேண்டும் (என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்! என்றார்கள். நூல் : புகாரி 351

மேற்கண்ட வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜில்பாப் என்ற சொல்லே இந்த ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வருவதற்கு அவர்களிடம் ஜில்பாப் இருப்பது அவசியம் என்றும் அப்படி இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.

பெருநாள் தொழுகைக்கு வரும் பெண்கள் ஜில்பாப் போட்டுக் கொண்டு தான் வர வேண்டும் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு முன்னர் எடுத்துக் காட்டிய - கண்ணம் கருப்பாக இருந்த பெண் பற்றிய – ஹதீஸை இணைத்துப் பாருங்கள். அந்த நிகழ்வும் பெருநாள் தினத்தில் தான் நடந்தது. பெருநாளில் தான் அந்தப் பெண் கேள்வி கேட்டுள்ளார். ஜில்பாப் என்பதற்கு தலையிலிருந்து முகத்தை மறைக்கும் வகையில் தொங்கவிடுதல் என்ற பொருள் இருக்குமானால் அப்பெண்ணின் முகம் தெரிய வாய்ப்பில்லை. அந்தப் பெண் ஜில்பாப் போடவில்லை என்றும் கூற முடியாது. ஜில்பாப் அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதால் அப்பெண் ஜில்பாப் இல்லாமல் இருந்திருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் ஏன் ஜில்பாப் அணியவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்காமலும் இருக்க மாட்டார்கள்.

அந்தப் பெண் ஜில்பாப் அணிந்திருந்தும் கூட அவரது கண்ணம் கருப்பாக இருந்ததை ஒரு ஆண் சொல்ல முடிகிறது என்றால் ஜில்பாப் என்பது முகத்தை மறைக்கும் ஆடை அல்ல என்பதும் தலையில் இருந்து மார்பின் மீது போடும் ஆடை தான் என்பதும் உறுதியாகிறது.

மேலும் முக்காடுகளைத் தொங்கவிடுதல் என்பதற்கு முகத்தை மறைப்பது என்பது பொருளாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் பெண்கள் முகத்தை மறைக்காமல் இருந்ததைக் கண்டித்திருப்பார்கள். அவர்கள் கண்டிக்கவில்லை என்பதை முன்னரே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

முகத்தை மறைக்க வேண்டும் என்போர் பின்வரும் வசனத்தையும் சான்றாகக் காட்டுகிறார்கள்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். திருக்குர்ஆன் 24 : 31

முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் குர்ஆனில் கும்ரு என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. கிமார் என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் முகம் உட்பட தலையை மறைக்கும் ஆடை எனக் கூறி இந்த வசனத்தையும் தங்களின் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இவ்வசனத்தில் முக்காடுகளைப் போட்டுக் கொள்ளுமாறு பொதுவாகக் கூறப்படாமல் மார்பின் மீடு போட்டுக் கொள்ள வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. முகத்தின் மீது போட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தால்தான் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தை சான்றாகக் காட்டலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை என்பதால் இதை முகத்தை மறைக்க சான்றாகக் காட்ட முடியாது.

கிமார் என்ற சொல்லின் நேரடிப் பொருள் மறைக்கக் கூடியது என்பதாகும். தலையை மறைத்தல் என்ற பொருளிலும் முகத்தை மறைத்தல் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இடத்துக்கு ஏற்ப இரண்டில் ஒரு பொருளைக் கொள்ள வேண்டும்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கிமார் என்பதற்கு தமது நூலான ஃபத்ஹுல் பாரியில் ஒரு இடத்தில் தலையை மறைக்கும் ஆடை எனவும் மற்றொரு இடத்தில் முகத்தை மறைக்கும் ஆடை எனவும் விளக்கம் கூறுகிறார்.

இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது. அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் கிமார் என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்கும் சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட வசனத்தில் கிமார் போட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறப்படாமல் கிமார்களை மார்பில் போட்டுக் கொள்ளட்டும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டதால் இந்த இடத்தில் முகத்தை மூடும் ஆடை என்று பொருள் கொள்வது தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள்.

ஹதீஸ்களில் கிமார் என்பது தலைத்துணி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

மாதவிடாய் (ஏற்படும் பருவமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூதாவூத் 5460

பெண்கள் தொழும்போது முக்காடுடன் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. முக்காடு என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் கிமார் என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது. கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என தவறான பொருளை இங்கே பொறுத்தினால் பெண்கள் தொழுகையின் போது முகத்தை மூடுவது கட்டாயம் என்ற தவறான முடிவு ஏற்படும்.

பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கருத்துடையவர்கள் தொழுகையின் போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் கூறுவதில்லை. மேற்கண்ட ஹதீஸில் உள்ள கிமார் என்பதற்கு முகத்தை மறைக்கும் ஆடை என்று பொருள் கொடுப்பதில்லை. தலையை மறைக்கும் ஆடை என்றே பொருள் கொடுக்கின்றனர்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

எனது சகோதரி காலணி அணியாமலும் கிமார் (தலைத்துணி) அணியாமலும் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துள்ளார் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (கூறி இது பற்றி) வினவினேன். அதற்கு அவர்கள் உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். அவர் தலைத்துணி அணிந்து கொள்ளட்டும். வாகனத்தில் ஏறி வரட்டும். அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். அபூதாவுத் (2865)

ஹஜ் செய்யும் பெண்கள் முகத்தை மூடக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த ஹதீஸை முன்பே பார்த்து விட்டோம். இந்த ஹதீஸில் கிமார் அணிய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சகோதரிக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

கிமார் என்பது முகத்தை மறைக்கும் ஆடையாக இருந்தால் முகத்தை மறைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட ஹஜ்ஜில் கிமாரை அணியுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.

கிமார் என்பது தலையை மட்டும் மறைக்கும் துணி என்பதாலே இதை ஹஜ்ஜின் போது அணியுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

முகத்தை மறைக்க வேண்டும் என்போர் பின்வரும் செய்தியையும் சான்றாகக் காட்டுகிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(பெண்களாகிய) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்த போது ஒட்டகத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு அருகில் வரும்போது தலையில் உள்ள முக்காட்டை முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். அவர்கள் எங்களைக் கடந்து சென்றுவிட்டால் முக்காட்டை அகற்றிக் கொள்வோம். அபூதாவூத் 1562

இந்தச் செய்தியில் யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் முயீன், அபூ சுர்ஆ, அபூ ஹாதிம், இப்னு அதீ ஆகியோர் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான செய்தி.

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டால் கூட இதை வைத்து பெண்கள் முகத்தை மூடுவது கட்டாயம் என்று கூற முடியாது. ஏனென்றால் இந்தச் செய்தியில் ஆண்கள் பெண்களைக் கடந்து செல்லும் போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. நபித்தோழியர்களே சுயமாகவே இவ்வாறு செய்துள்ளனர். அத்துடன் இது ஆதாரப்பூர்வமானதும் அல்ல.

எனவே பெண்கள் முகத்தைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றும் இல்லை. பெண்கள் முகத்தை மறைப்பதற்கும் மறைக்காமல் இருப்பதற்கும் அனுமதியுள்ளது.

பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை என்றாலும் முகத்தை மறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகச் செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

மார்க்கத்தில் முகத்தை மறைக்காமல் இருப்பதற்கு அனுமதி உள்ளது போல் முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. அனுமதிக்கப்பட்ட காரியங்களின் மூலம் கேடுகள் ஏற்படுமானால் அந்தக் கேடுகளின் காரணமாக அதைத் தவிர்ப்பதும் மார்க்கத்தின் ஒரு அம்சமாகும்.

அதிகக் கொழுப்புள்ள உணவுகள் அனுமதிக்கப்பட்டவை என்றாலும் உடலுக்கு அது நல்லதல்ல என்றால் அதை நாம் தவிர்ப்பதே நல்லதாகும்.

பெண்கள் முகத்தை மறைப்பதால் ஏற்படும் கேடுகள் நமக்கு பளிச்சென்று தெரிகின்றன.

முஸ்லிமல்லாத பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் சுற்றும் போது முகத்திரை போட்டு தம்மை மறைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு முகத்திரை போட்டு கண்டபடி சுற்றும் இளவட்டங்களில் சரிபாதிப் பேர் முஸ்லிம்கள் அல்லர் என்பதே உண்மை.

முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்

வேசித்தொழில் செய்யும் முஸ்லிமல்லாத கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வது

சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது

இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும் போது எதில் கேடு இல்லையோ அதைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிக அதிகமாகும்.

முகத்தை மறைத்து ஆக வேண்டும் என்று மார்க்கத்தில் கட்டளை இருந்தால் அப்போது விளைவுகளை நாம் கவனிக்கக் கூடாது. இரண்டும் அனுமதிக்கப்பட்டவை தான். அனுமதிக்கப்பட்ட காரியங்களில் எதில் கேடுகள் உள்ளதோ அதைத் தவிர்க்கத் தான் வேண்டும். இந்த அடிப்படையில் தான் பெண்கள் முகம் மறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

திருமறையின் சில வரிகள்..

அளவற்ற அருளாளன்

மொத்த வசனங்கள் : 78

55:1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.
55:3. மனிதனைப் படைத்தான்.
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
இந்த தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் சில இஸ்லாமிய தளங்களிலிருந்தும், நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாகும்.